தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், மதிய நேரங்களில் வெளியில் செல்பவர்கள் குடை பிடித்தபடியும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும், இளைஞர்கள் தொப்பி மாட்டிக்கொண்டும் சென்று வருகின்றனர். சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை காத்துக்கொள்ள பொதுமக்கள் குளிர்பானங்கள், மோர், பழரசம், இளநீர் வாங்கி அருந்துகின்றனர். இதனால் இந்த கடைகளில் கூட்டம் அதிகரிப்பதுடன் விற்பனையும் அமோகமாக இருக்கிறது. இதேபோல, வெயிலில் இருந்து உடல் சூட்டை தணிக்கும் நுங்கு விற்பனையும் அமோகமாக இருக்கிறது. தஞ்சாவூர் நகரில் ஆற்றுப்பாலம், பழைய கோர்ட் ரோடு, பெரிய கோவில், மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை யோரங்களில் வியாபாரிகள் நுங்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். இதில், பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால் பொதுமக்கள் நுங்கு வியாபாரிகளை தேடி வந்து வாங்கி செல்கின்றனர்.