கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழு கூட்டத்தில் தமிழக அரசு 2023-2024 ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத்தில் தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர் மகளிர்க்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழு தலைவர் சுமித்ராதேவி தலைமையில் துணைத் தலைவர் கவிதா,பிடிஓ தவமணி,ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தீர்மானங்களை ராஜமாணிக்கம் வாசித்தார். இதில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 என மகளிர்க்கு வழங்கப்படும் என கூறியிருந்தனர். அதன்படி தமிழக சட்டமன்ற 2023-2024 பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்து சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் ஒன்றிய அலுவலகத்தின் செலவினங்கள் உட்பட மொத்தம் 34 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.