திருப்பூர், மார்ச் 20: தமிழகத்தில் சாமி சிலைகள் கடத்தலை தடுக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் ஆலயங்கள் இந்துக்களின் வழிபாட்டு தலமாக மட்டும் இன்றி, வாழ்க்கையோடு ஒன்றிணைந்த கலாச்சார பண்பாட்டு மையமாக உள்ளது. ஆலயத்தில் இருக்கும் தெய்வ சிலைகள், கலாச்சாரம் மற்றும் நம் நாட்டின் கலை நுட்பத்தை பறைசாற்றுபவை. ஆலயங்கள் நிறைந்துள்ள தமிழகத்தில், தெய்வ சிலைகள் திருடப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. திருடப்பட்ட பல சிலைகள், சிலை தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல் மூலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த சிலைகள் உரிய ஆலயங்களில் இதுவரை ஒப்படைக்கப்படாமல், கருவூலத்தில் இருந்து வருகிறது.