பெருங்குளம் மாயக்கூத்தர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஏரல், மார்ச் 19:  பெருங்குளம் மாயக்கூத்தர் பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள நவதிருப்பதி தலங்களில் 6வது தலமாக விளங்கும் பெருங்குளம் மாயக்கூத்தர் பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் துவங்கி 11 நாட்கள் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை யொட்டி நேற்று காலை 5 மணிக்கு விஸ்வரூபம், 5.30 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு தீபாராதனை, 6.45 மணிக்கு நித்தியல் நடந்தது. தொடர்ந்து 7.45 மணிக்கு சுவாமி மாயக்கூத்த பெருமாள் தாயார்களுடன் முன் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் 8.15 மணிக்கு கொடிப்பட்டம் மாட வீதி சுற்றி வந்தது. 8.40 மணிக்கு அர்ச்சகர் சுந்தரம் கொடி ஏற்றினார்.

தொடர்ந்து காலை 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் சாத்து முறை நடந்தது. தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, 7 மணிக்கு பரங்கி நாற்காலியில் வீதி புறப்பாடு நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஸ்தல அர்ச்சகர் வெங்கடேசன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் சிவலோகநாயகி ஆத்தான், கீழத்திருமாளிகை ராமானுஜம் சுவாமி, ஸ்தலத்தார்கள் சீனிவாசன் ராமானுஜம், ஸ்ரீதர், ஸ்ரீகாரியம் அஸ்வின், கள்ளப்பிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

திருவிழா தொடங்கியதையடுத்து தினமும் காலை தோளுக்கினியானில் வீதி புறப்படும் நிகழ்ச்சியும், மாலையில் பரங்கி நாற்காலி சிம்ம வாகனம், அனுமான் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், புன்னைமர வாகனம், குதிரை வாகனம், பல்லக்கு வெட்டிவேர் சப்பரம் வீதி உலா வரும் நிகழ்ச்சி மற்றும் தெப்ப உற்சவம், புஷ்பாஞ்சாலி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீகுளந்தைவல்லித் தாயார் கைங்கர்யம் சபாவின் செய்துள்ளனர்.

Related Stories: