மின்கசிவு காரணமாக பிரபல துணிக்கடையில் தீ

தாம்பரம், மார்ச் 19: குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணைக்கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிக்னல் அருகே பிரபல துணிக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

இந்நிலையில், இந்த துணிக்கடையின் மேல் தளத்தில் இருந்து நேற்று காலை கரும் புகை வந்துள்ளது. இதனைகண்ட பொதுமக்கள் இதுகுறித்து குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கடையின் மாடியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். தீயணைப்பு துறையினரின் உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில், கடையின் மேல் தளத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த துணிகள் எரிந்து நாசமானது.

முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: