கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் விபரீத பயணம்

நெல்லிக்குப்பம், மார்ச் 18:    நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இம் மாணவ, மாணவிகளின் கல்வி தரம் உயரும் நோக்கத்திலும், அம் மாணவர்கள் கல்வி பயிலச்செல்ல பேருந்து கட்டணம் கொடுக்க முடியாத நிலையில் உள்ள பெற்றோர்களின் மண உலைச்சலை தவிர்க்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

 ஆனால் இலவச பஸ் பாஸ் வழங்கும் தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி பேருந்தில் பயணம் செய்ய கூடுதல் பஸ் விடவில்லை. இதன் விளைவு தினமும் ஆபத்தான பயணத்தை மணவர்கள் மேற்கொள்கின்றனர். படிக்கட்டில் நிற்காதே என்று சொல்லும் ஓட்டுனர்கள் இந்த விஷயத்தில் என்ன செய்வதென்று அவர்களுக்கே தெரியாமல் திகைக்கின்றநர். ஏனெனில் பேருந்துகள் குறைவாக இருப்பது அவர்களுக்கும் தெரியும். அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அடித்து பிடித்துக் கொண்டு பஸ்களில் ஏறி தொங்கி கொண்டு செல்லும் இவர்களை கண்டு அவர்களின் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.   

மேலும் பள்ளி, கல்வி நேரத்தில் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் பேருந்தில் ஏற முண்டியடித்து ஏறி தொங்கி செல்லும் போது மாணவிகளும் அதில் கடின முயற்சியில் பஸ்சில் ஏறி நெரிசலில் இடிபாடுகளில் சிக்கி தவிக்கின்றனர். இதனை காணும் பெற்றோர்கள் தங்களது மகள்களின் நிலைமையை கண்டு அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே நெல்லிக்குப்பம் என்றால் பள்ளி மாணவர்கள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் தான் நினைவுக்கு வரும். அதே போல் இப்போது மேலும் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடுமோ என பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.  

 எனவே பள்ளி நேரத்தில் கூடுதலாக கடலூர் பண்ருட்டி சாலையில் அரசு பேருந்துகள் இயக்கினால் விபத்துகள் குறித்த இப்பிரச்னைக்கு ஒரு முற்று புள்ளி வைக்கலாம். இது சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளும், அரசும் கவனித்து உரிய நடவடிக்கை எடுத்தால் அதிக அளவில் விபத்துகள் தவிர்க்கப்படும். இல்லையெனில் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து கடலூர் பண்ருட்டி சாலையில் பள்ளி நேரத்தில் கூடுதல் அரசு டவுன்பஸ் இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: