வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு

நாமக்கல், மார்ச் 18: கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை, கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சோழசிராமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து புத்தகங்களை வாசிக்க செய்து பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, சோழசிராமணி ஊராட்சி அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு, மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுகள் குறித்த விவரங்கள் கேட்டறிந்து, அட்டவணைப்படி குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறதா எனவும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு தரம் குறித்தும் ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை, குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்து, அங்கிருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார். பின்னர், சோழசிராமணி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ₹11.29 லட்சத்தில் நீர்வரத்து கால்வாய் ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்கும்படி அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பிடிஓ.,க்கள் துரைசாமி, பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: