இளம்பெண் சாவில் மர்மம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

தஞ்சாவூர்: தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுபள்ளி அருகே அகரபேட்டை கிராமத்தை சேர்ந்த மறைந்த தம்பிராஜ் என்பவரின் மகன் ராஜ்மோகன் (26). வெல்டிங் தொழிலாளி. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன் காதலித்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த குத்தாலம் அருகே கோட்டூர் பகுதியை சேர்ந்த குணசீலா (24) என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. இவர் கடந்த மாதம் 20ம் தேதி தனது கணவர் ஊரான அகரபேட்டைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி குணசீலா சமைக்கும் போது புடவையில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 7ம் தேதி சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 12ம் தேதி உயிரிழந்தார். எனவே இதையறிந்த குணசீலா உறிவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்து நேற்று திடீரென மருத்துவமனை நுழைவு வாயிலில் சாலை ஈடுபட்டனர். மேலும் ராஜ்மோகன், அவரது தாய் சிவகாமி, அண்ணன் ராஜேஷ் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளார்கள். எனவே சம்மந்தபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யும் வரை சாலை மறியலை கைவிடமாட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சாவூர் டவுன் டிஎஸ்பி ராஜா, மற்றும் ராஜ்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வல்லத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Related Stories: