கரூர்: வௌிமாநில தொழிலாளர்கள் தொடர்பாக தவறான தகவல்களை சமூகவலைதளங்கள் மூலம் பரப்பும் நபர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம், வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் உள்பட அனைத்து போலீசார்களும், வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவு வசித்து வரும் பகுதிகளுக்கு சென்று, அவர்களின் குறைகள் கேட்பதோடு, பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதோடு, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அறிவுரை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில், அனைத்து போலீசார்களும், வெளிமாநில தொழிலாளர்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு சென்று, விழிப்புணர்வுகளை வழங்கினர்.