பல்லடம்,பிப்.24: பல்லடம் நகராட்சி 8வது வார்டு பச்சாபாளையத்தில் ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பல்லடம் சுற்று வட்டாரத்தில் 1 லட்சம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் சடலங்களை தகனம் செய்ய சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள திருப்பூர், கொடுவாய், சூலூருக்கு சென்று அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் பொருள் செலவும், காலவிரயமும் ஏற்படுகிறது. பல்லடத்தில் மின் மயானம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில்,அதனை நிறைவேற்றி தருவதாக திமுக நகர செயலாளர் ராஜேந்திரகுமார் உறுதி அளித்து இருந்தார். நகராட்சி தலைவராக கவிதாமணி ராஜேந்திரகுமார் பொறுப்பேற்றவுடன் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பரிந்துரையின் பேரில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின் மயானம் அமைக்க ரூ.1 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். 8வது வார்டு பச்சாபாளையத்தில் 6.50 ஏக்கர் பரப்பில் உள்ள மயான நிலத்தில் மின்மயானம் அமைக்க நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மின் மயானம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.