திருப்பூர்,பிப்.24: பாத்திர தொழிலாளர்களுக்கான புதிய சம்பள ஒப்பந்தம் தொடர்பாக, தொழிற்சங்கத்தினருடன், பேச்சுவார்த்தை நடத்த எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்தனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் (சமரசம்) செந்தில்குமார் முன்னிலையில், பாத்திர உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கத்தினர் இடையே பல கட்டங்களாக பேச்சுவார்தை நடந்தது.ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையின் போது, உற்பத்தியாளர்கள் தரப்பில், தொழில் சரியாக இல்லாததால், ஓராண்டுக்கு பின்னர் கூலி உயர்வு குறித்து பேசிக்கொள்ளலாம். அதுவரை பழைய கூலியே வழங்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். தொழிற்சங்கத்தினர் இதை ஏற்கவில்லை. இதையடுத்து, பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திற்கு கடந்த 21ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சிறிது இறங்கி வந்த பித்தளை உற்பத்தியாளர் சங்கத்தினர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தனர்.