வேதாரண்யம்,பிப்.21: வேதாரண்யம் தாலுகா பகுதியில் தகட்டூர் மின் இறவை பாசன திட்டம் தற்பொழுது மூடப்படும் நிலையில் உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தகட்டூர் தென்னடார், வாய்மேடு, மருதூர் பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மின் இறவை பாசன திட்டம் உள்ளது. இந்த திட்டம் 1951ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த பொழுது பக்தவசலம் அந்தத் துறையின் அமைச்சராக இருந்தபோது தகட்டூரில் முதன் முதலில் மின் இறவை பாசன திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் தொடங்கிய நிலையில், இயந்திரங்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்டு பொருத்தப்பட்டன. ஒவ்வொரு மோட்டார் இயந்திரமும் 35 குதிரை திறன் கொண்டதாக செயல்பட்டு வந்தன. மோட்டாரை இயக்க வசதியாக 1951ல் இருந்து 65 வரை தொலைபேசி வசதி இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில் சிறப்பான ஒரு முறையில் மின் இறவை பாசன திட்டம் செயல்பட்டு வந்துள்ளது. மேலும் மோட்டார் இயக்க இயக்குனர்கள் இருந்தனர். அவர்கள் தங்க வீடு வசதியும் செய்து தரப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் சரிவர பராமரிக்கப்படாததால், தகட்டூர் மின் இறவை பாசன திட்டம் மிகவும் பழுதடைந்து உள்ளது. தற்பொழுது 4 மோட்டார் வாங்கி வந்த நிலையில் ஒரே ஒரு மோட்டார் மட்டும் இயங்கி வருகிறது.