போக்குவரத்து போலீசாருக்கு உடம்பில் அணியும் காமிராக்கள்

தூத்துக்குடி, செப். 30: தூத்துக்குடி மாவட்டத்தில்  போக்குவரத்து காவல் துறையினருக்கு உடம்பில் அணியும் 6 காமிராக்களை எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட  காவல்துறையினரின் பயன்பாட்டுக்கு என தமிழக அரசு ரூ.1,34,000 மதிப்புள்ள 6  உடம்பில் அணியும் புதிய நவீன ரக காமிராக்கள் மற்றும் சேமிப்பு கருவியை (Body Worn Camera and Storage Device) வழங்கியுள்ளது. இந்த காமிராக்களை போக்குவரத்து காவல்துறையினர், தங்கள்  சட்டையில் அணிந்து கொண்டு அவர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ளும்போது அந்த  இடத்தில் நடைபெறும் சம்பவங்களை வீடியோ, ஆடியோ, புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்யவும், பதிவு செய்தவற்றை சேமிக்கவும் வசதி உள்ளது. இதை காவல்துறையினர் வாகன சோதனை, ரோந்து செல்லுதல், போக்குவரத்து சீர்செய்தல்  போன்ற காவல்துறையின் பல்வேறு வகையான பணிகளுக்கும் பயன்படுத்திக்  கொள்ளலாம்.

இது காவல்துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காமிராக்களில் 4 தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்திற்கும், கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்திற்கு ஒன்றும், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு காவல்  நிலையத்திற்கு ஒன்றும் என மொத்தம் 6 காமிராக்களை மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் போக்குவரத்து பிரிவு காவலர்களுக்கு எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார். மேலும் இதன் செயல்பாடுகள், அதனை பயன்படுத்தும் முறை பற்றியும்  விளக்கினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் லதா, எஸ்ஐ திருநாவுக்கரசு,  மத்தியபாகம் போக்குவரத்து எஸ்ஐ நாகராஜன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Related Stories: