தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து வார்டுகளையும் சீர்மிகு வார்டாக மாற்ற நடவடிக்கை

தூத்துக்குடி, செப். 30: தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. ஆணையாளர் சாரு, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும் மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தூத்துக்குடி-மீளவிட்டான் இடையே நிகிலேசன் நகர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறையை கேட்டுக் கொள்வது, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டப்படும் அனுமதியற்ற கட்டுமானங்கள், அனுமதிக்கப்பட்ட வரைபடத்துக்கு மாறாக கட்டி வரும் கட்டிடங்கள் மீது உரிய அறிவிப்பு வழங்கி நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளவும் தற்காலிக பணியாளர்கள் நியமிப்பது என்பன உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், மாநகராட்சி பகுதியில் அனுமதியற்ற கட்டிடங்களால் மாநகராட்சி வருவாய் பாதிக்கப்படுகிறது. இதனால் அனுமதி பெறாத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி பகுதியில் 80% மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கவுன்சிலர்கள் பிரச்னைகளை உதவி ஆணையரிடம் தெரிவிக்கலாம். பிரச்னைகள்  தீர்க்கப்படவில்லை எனில் ஆணையாளரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது என்று இருந்து விடக்கூடாது. மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டையும் சீர்மிகு வார்டாக மாற்ற வேண்டும். அதற்காக தொடர்ந்து கவுன்சிலர்கள், அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். அனைத்து வார்டுகளிலும் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக 2 ஆயிரத்து 500 விளக்குகள் வர உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். இதனால் அனைத்து பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. மழைநீர் தேங்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 60 வார்டுகளிலும் பூங்கா அமைக்கப்படும். காலியாக உள்ள இடங்களிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும் பூங்கா அமைக்கப்படுகிறது. இதுவரை சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன, என்றார்.அனைத்து கவுன்சிலர்களும் தங்களது வார்டுகளில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து பேசினர். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். கூட்டத்தில் உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: