உண்டு உறைவிடப்பள்ளி நடத்த கருத்துரு வரவேற்பு

கிருஷ்ணகிரி, செப்.30: கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியம், தளி கொத்தனூரில் நடைபெற்று வரும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற, 14 வயதிற்கு உட்பட்ட 100 பெண் குழந்தைகள் தங்கி பயிலும் வகையில், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலாயா உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் 100 மாணவ, மாணவிகள் தங்கி பயிலும் வகையில், கக்கதாசம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி என மொத்தம் 2 உண்டு உறைவிடப் பள்ளியை நடத்துவதற்கு, அனுபவம் மற்றும் ஆர்வமுள்ள பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து, நிபந்தனைக்குட்பட்டு கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான கல்விப்பணியில் குறைந்தது 3 ஆண்டு கால அனுபவம் கண்டிப்பாக பெற்றிருத்தல் வேண்டும். தொண்டு நிறுவனங்கள் சொசைட்டி ஆக்ட், டிரஸ்ட் ஆக்ட்டின் கீழ் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். அப்பதிவு அவ்வப்போது புதுப்பிக்கப்படல் வேண்டும்.  தொண்டு நிறுனங்கள் அந்நிறுவனத்தின் பெயரில் 80ஜி அல்லது 12 ஏஏ எக்சம்ப்ஸசன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழக, ஒன்றிய அரசால் நீக்கம் செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் பட்டியலில் இருந்தல் கூடாது. அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று செயல்பாடுகளை மேற்கொள்தவற்கு தொண்டு நிறுனங்கள் என்கிற இணையதளத்தில் பதிவு செய்து, தனி அடையாளம் பெற்றிருத்தல் வேண்டும். தொண்டு நிறுவனங்கள் கட்டாயமாக அந்நிறுவனம் பெயரில் பேன் கார்டு வைத்திருக்க வேண்டும்.

கடந்த 3 நிதி ஆண்டுகளில் அத்தொண்டு நிறுவனம் / சுய நிதிகுழுவின் வரவு-செலவு சார்ந்த ஆண்டு தணிக்கை விவரங்களை வைத்திருத்தல் வேண்டும். நிதி நிலை விவரங்கள் திருப்திகரமாக இருத்தல் வேண்டும். இதுவரை, எவ்வித துறை ரீதியான புகார்களுக்கும் இடமளிக்காமல் பணியாற்றிய மிக சிறந்த தொண்டு நிறுவனமாக இருத்தல் வேண்டும். தங்களது கருத்துருக்களை கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் வருகிற அக்டோபர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: