வரத்து குறைவால் விலையேற்றம் கேரட் விலை ரூ.100ஐ தாண்டியது

நெல்லை, செப். 28: தென் மாவட்டங்களுக்கு வரத்து குறைவால் மலைக்காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நெல்லையில் கேரட் விலை ரூ.100ஐ தாண்டி காணப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை பலர் தவிர்ப்பது வழக்கம். இதையடுத்து புரட்டாசி மாதத்தில் பெரும்பாலும் காய்கறி கள் விலை உயர்வது வழக்கம். அதிலும் இவ்வாண்டு மலைக்காய்கறிகளின் விலை புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை வரவழைத்து விற்பனை செய்வது வழக்கம். இவ்வாண்டு வரத்து குறைவால் மலைக் காய்கறி களின் விலை அதிகரித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி கேரட் விலை ஒரு கிலோ ரூ.106ஆக உள்ளது. பீட்ரூட் விலை ரூ.46 முதல் 50 ஆகவும், ரிங் பீன்ஸ் ரூ.75 ஆகவும் காணப்படுகிறது. காலிபிளவர் விலை ரூ.70 ஆக உள்ளது. புரட்டாசி மாதத்தில் ஏற்கனவே காய்கறிகளின் விலை அதிகரிக்கும் நிலையில், இவ்வாண்டு உள்ளூரில் விளையும் வெள்ளை கத்தரிக்காய், பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றின் விலையும் கூட ரூ.50ஐ தாண்டி காணப்படுகிறது. அவரைக்காய் ரூ.80 வரை விற்கப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘புரட்டாசி மாதத்தில் சைவம் விரும்பி சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகம். அதிலும் தசரா காலமாக இருப்பதாலும், சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி என பண்டிகைகள் அணிவகுக்கும் நிலையில் காய்கறிகளின் விலை இயல்பாகவே ஏறும். இப்போது மலைக் காய்கறிகள் வரத்து குறைவு காரணமாக கேரட், பீன்ஸ் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. ஐப்பசி மாதத்திலும் முகூர்த்த சீசன் காரணமாக காய்கறிகள் விலை குறையும் வாய்ப்பில்லை. அதேபோல் மழை அதிகம் பெய்தாலும் விலையேற்றத்தில் மாற்றம் இருக்காது’’ என்றனர்.

Related Stories: