காட்டூரில்தேங்கிய மழை தண்ணீரால் மாணவர்கள் அவதி

திருவெறும்பூர்,செப்.27: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் சாலையில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் சாகச பயணத்தில் ஈடுபட்டனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த 2 பள்ளிகளிலும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக காட்டூர் அரசு பள்ளிக்கு செல்லக்கூடிய சாலையில் தண்ணீர் தேங்கி நின்று மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்வு காலம் என்பதால் மாணவர்கள் தேங்கி நிற்கும் வெள்ள நீரில் நடந்து சென்றும், சிலர் அருகில் உள்ள காம்பவுண்ட் சுவரில் ஏறி அந்த வெள்ள நீரை கடந்து பள்ளிக்கு செல்கின்றனர். மேலும் இந்த சாலை வழியாக திருநகர், அண்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்புகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் சாலை, தாழ்வாக இருப்பதால் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வெள்ள நீர் வடிந்து பள்ளி செல்லும் சாலையிலே தேங்கி நிற்கிறது. எப்போது மழை பெய்தாலும் இது போன்ற நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அதற்கான எவ்வித முயற்சி எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நலன் காக்க வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: