சிதம்பரம், செப். 23: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட சாமிகளுக்கு ஏராளமான தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும் கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் கடைசியாக ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதன் பிறகு கோயிலுக்கு வந்த புதிய நகைகள் எதுவும் ஆய்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கடந்த சில தினங்களாக நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.