செம்பனார்கோயில், ஆக.11: செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கான தொகை கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 4986 எக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெரும்பான்மையான விவசாயிகள் பருத்தி அறுவடைப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு பருத்தி வரத்து அதிகரித்துள்ளது. செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்கீழ் நடப்பாண்டுக்கான மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள், தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். விற்பனை செய்யப்பட்ட பருத்திக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.