செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கான தொகை கேட்டு விவசாயிகள் காத்திருப்பு

செம்பனார்கோயில், ஆக.11: செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கான தொகை கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 4986 எக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெரும்பான்மையான விவசாயிகள் பருத்தி அறுவடைப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு பருத்தி வரத்து அதிகரித்துள்ளது. செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்கீழ் நடப்பாண்டுக்கான மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள், தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். விற்பனை செய்யப்பட்ட பருத்திக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு விற்பனை செய்யப்பட்ட பருத்திக்கான தொகை இதுவரை தங்களது வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த போவதாக கூறினர். மேலும் அவர்கள், நடப்பாண்டில் விற்பனை செய்யப்பட்ட பருத்திக்கு இதுவரை நல்ல முறையில் பணம் கிடைக்க பெற்ற நிலையில், தற்போது பருத்தி விற்பனை செய்ததற்கான பணம் தங்களது வங்கி கணக்கில் செலுத்தப்படாததால் மிகுந்த வேதனை அளிப்பதாக ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனை ஏற்ற அதிகாரிகளின் வாக்குறுதியை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Related Stories: