விளாத்திகுளம்,ஆக.9: விளாத்திகுளம் எட்டயபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி செல்லம்மாள் (72). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வழங்கும் அரிசி மற்றும் உறவினர்கள் சிலரின் அரவணைப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மூதாட்டி செல்லம்மாள் தனது வீட்டின் அருகில் வேப்பமுத்து எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ வீடு முழுவதும் பரவி எரிந்தது. இதில் வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்கள் உட்பட அனைத்து பொருட்களும் நாசமானது. ஆதரவற்ற நிலையில் குடிசை வீடும் தீக்கிரையானதால் அவர் கதறி அழுதார்.