மதுரை, ஆக. 6: வாசித்தல் மாரத்தானில் மதுரை மாவட்டம் சாம்பியன் ஷிப் பட்டம் பெற உறுதுணையாக இருந்த கல்வி அலுவலர்களுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் விருதுகள் வழங்கி கவுரவித்தார். மதுரையில் இல்லம் தேடிக் கல்வி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா வரவேற்றார். கூடுதல் கலெக்டர் சரவணன், கலெக்டரின் நேர்முகஉதவியாளர்(பொது) மாறன், இல்லம் தேடிக்கல்வி மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் கணேசன் முன்னிலை வகித்தனர். வாசித்தல் மாரத்தானில் மதுரை மாவட்டம் சாம்பியன் ஷிப் பட்டம் வென்றதற்கு உறுதுணையாக இருந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள்(பொ), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாவட்ட கலெக்டர் விருதுகள் வழங்கி கவுரவித்தார். இதேபோல், 15 ஒன்றியங்களில் உள்ள இல்லம் தேடிக்கல்வி மாணவர்களுக்கு விதையுடன் கூடிய விதைப்பைகள் வழங்கப்பட்டிருந்தது.