கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் செடல் உற்சவம்

கடலூர், ஆக. 6: கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் செடல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு செடல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கடலூர் முதுநகரில் பிரசித்தி பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் செடல் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் நேற்று நடைபெற்றது.

 இதற்காக அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு செடல் போடப்பட்டது. அப்போது கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தங்கள் உடலில் செடல் போட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரத உற்சவம் நடைபெற்றது.

இதேபோல ஆடி 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோயில் செடல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு செடல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கடலூரில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: