திருச்சி, ஜூன் 25: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்தால் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும்போது கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்துவோம் என்று திருச்சியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். இதில் டிஆர்ஓ அபிராமி, வேளாண் இணை இயக்குநர் முருகேசன், வேளாண் நேர்முக உதவியாளர் மல்லிகா, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், வறட்சியின் காரணமாக 2021ம் ஆண்டு அனைத்து விவசாயிகளின் கடனும் தள்ளுபடி ஆனது. ஆனால் மத்திய காலக்கடன் தள்ளுபடி ஆகவில்லை. குறுகிய கால கடனை மத்திய கால கடனாக மாற்றிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்து உதவிட வேண்டும். அதிக மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்கிட வேண்டும். மோகனூர் சர்க்கரை ஆலைக்கு 6 மாதத்திற்கு முன்பு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு உடனடியாக பணம் கிடைக்க உதவிட வேண்டும். மருதாண்டங்குறிச்சி வாய்க்காலை தூர்வார வேண்டும்.