குமரி மாவட்டத்தில் கலை பண்பாட்டு துறை விருதுக்கு 15 பேர் தேர்வு: பொற்கிழி, பட்டயம் வழங்கப்படும்

நாகர்கோவில், ஜூன் 25: குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் கன்னியாகுமரி மாவட்ட கலைமன்றத்தின் வாயிலாக 2021 - 2022ம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 15 கலைஞர்கள் விருதுகள் வழங்கிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருதுகள் தமிழ்நாட்டின் கலைப்பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் வழங்கப்படுகின்றன. மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஆண்டுதோறும் மாவட்ட அளவில் 5 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விருதுகளை 2021 - 2022ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 15 விருதுகளாக உயர்த்தி கலை விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.

2021 - 2022ம் ஆண்டுக்கு விருதுகள் வழங்க, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா  முன்னிலையில்  23ம் தேதி  நடைபெற்ற தேர்வுக் குழுக் கூட்டத்தில் திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சீதாராமன், கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு மற்றும் நாடக கலைஞர்  கோபாலகிருஷ்ணன், ஓவியக்கலைஞர்  ஏ.சந்திரன், வில்லிசைக்கலைஞர்  ராஜகுமாரன், சிலம்பாட்டக்கலைஞர்  ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களாக, வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் 15 கலைஞர்களை தேர்வு செய்துள்ளனர்.

கலை இளமணி விருதுக்கு, நாகர்கோவில் எம்.துர்காதேவி (வயலின்), கோட்டார் ஐ. ஜெய (நடனம்), நித்திரவிளை ஜோ.ஸ். தீரஜ் (பாட்டு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலை வளர்மணி விருதுக்கு பருத்திவிளை சி.சிவின்ஸ் (ஓவியம்), வேட்டுகாட்டுவிளை வி.ஸ்டாலின் ஜோஸ் (சிலம்பம்), கல்குறிச்சி ஆர்.எம். விவேக் (சிற்பம்) ஆகியோரும், கலைச்சுடர்மணி  விருதுக்கு அகஸ்தீஸ்வரம் எஸ்.திலகவதி (வாய்பாட்டு), குசவிளை கிருஷ்ணன் (நாதசுரம்), நாகர்கோவில் ஜி.ஆர்.ஜஷா (மரபு ஓவியம்) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். கலைநன்மணி விருதுக்கு, முஞ்சிறை ஆர்.சுகுமாரன் (விளக்குகெட்டு கலைஞர்), பாட்டத்துவிளை இராஜசேகரன் (ஓவியம்), தோவாளை பி.முத்துக்கோபால் (தோல்பாவைக்கூத்து) ஆகியோரும், கலைமுதுமணி விருதுக்கு, கல்லுக்கட்டி ஜங்சன் கே.கணேசன் (வில்லிசை - குடம்), தலக்குளம் ஏ.வேலப்பன் (சிலம்பம்), தேங்காய்பட்டணம் டி.தேவதாஸ் (நாடகம்) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மேற்படி விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு, குமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில், கலெக்டர் அரவிந்த் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கவுரவிக்க உள்ளார்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: