பயிற்சியாளரே இல்லாமல் யோகாவில் தங்கம்,வெண்கலம் வென்ற சகோதரிகளுக்கு உற்சாக வரவேற்பு

வத்திராயிருப்பு, ஜூன் 14: பயிற்சியாளரே இல்லாமல் யூடியூபை மட்டுமே பார்த்து நேபாளில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் தங்கம், வெண்கலம் வென்று அசத்திய சகோதரிகளுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.நேபாள நாட்டில் நடைபெற்ற இந்தோ-நேபாள் சர்வதேச யோகா போட்டியில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான சக்தி பிரியா, விஷாலி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தங்கை சக்தி பிரியா தங்கப் பதக்கத்தையும், அவரது அக்காள் விஷாலி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.நேற்று சொந்த ஊரான வ.புதுப்பட்டி கிராமத்திற்கு திரும்பிய சகோதரிகள் இருவருக்கும் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சார்பாக மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரையும் கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

இதுகுறித்து சகோதரிகள் இருவரும் கூறும்போது, தாங்கள் இருவரும் எந்தவித பயிற்சியாளர்கள் கொண்டும் பயிற்சி செய்யாமல் யூடியூப் மூலமாகவே பயிற்சி செய்து சாதனை படைத்துள்ளோம். ஏழ்மை நிலையில் உள்ள தங்களுக்கு தமிழக அரசு ஒரு சிறந்த பயிற்சியாளரை நியமித்தால் இன்னும் பல பதக்கங்களை வெல்ல முடியும் என தெரிவித்தனர்.

Related Stories: