திருச்செங்கோடு, ஜூன் 11: திருச்செங்கோடு சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார சரவணன்(32). விவசாயி. லாரி டிரைவராகவும் உள்ளார். இவரது மனைவி மனோன்மணி (27). முதுகலை பட்டதாரி. இவர்களது ஒரே மகன் தக்சின் (5). தனியார் மெட்ரிக் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். தற்போது ஆங்கிலத்தில் 26 எழுத்துகளில் தலா 10க்கும் மேற்பட்ட வார்த்தைகளையும், தமிழ் உயிர் எழுத்துகள், உயிர் மெய் எழுத்துகள் அடங்கிய 173 சொற்கள், 100 பழங்களின் பெயர்கள், 40 வாகனங்களின் பெயர்கள், 20 உடல் பாகங்கள், காய்கறிகள் 25, பழங்கள் 35 என சுமார் 800 வார்த்தைகளை தெரிந்து வைத்துள்ளான். இந்த சாதனை யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. பியூட்சர்கலாம் புக் ஆப் ரெகார்டிலும் சிறுவனின் சாதனை பதிவு செய்யப்பட்டு சான்றுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. மாணவனின் சாதனையை பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.