கொடைக்கானல், ஜூன் 9: கொடைக்கானல் மலைப்பகுதியில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கொடைக்கானலில் இந்த மையம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. நேற்று கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே 20 ஏக்கர் நிலத்தை தமிழக கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சண்முகசுந்தரம், மாவட்ட கலெக்டர் விசாகன் ஆகியோர் பார்வையிட்டனர். 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.85 கோடி செலவில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. விரைவில் இடம் தேர்வு முடிவு பெறும் என அலுவலர்கள் தெரிவித்தனர். இட தேர்வின் போது கொடைக்கானல் ஆர்டிஓ முருகேசன், திண்டுக்கல் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.