கன்டெய்னர் லாரியில் திடீர் தீவிபத்து ரூ.1 கோடி மதிப்பு வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசம்: திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கன்டெய்னர் லாரியில் எடுத்துச்சென்ற ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் அருகே போளிவாக்கம் பகுதியில் தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆர்டர் செய்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கன்டெய்னர் லாரியில் சாலை மார்க்கமாக டெல்லிக்கு புறப்பட்டது. இந்த கன்டெய்னர் லாரி நேற்று அதிகாலை போளிவாக்கம் பகுதியிலிருந்து புறப்பட்டது. திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெங்கத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கன்டெய்னரில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த லாரி டிரைவர் சாலையோரமாக நிறுத்திவிட்டு காவல்துறை, தீயணைப்புத்துறை, நிறுவனத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் மணவாளநகர் போலீசார் விரைந்து வந்தனர். லாரியை திறந்து பார்த்தபோது உள்ளே பொருட்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மளமளவென கன்டெய்னர் முழுவதும் தீ பற்றியதால் திருவூர் மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் கன்டெய்னர் லாரியில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது. ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் கொண்டு செல்லும் கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: