ஓஎன்ஜிசி குழாய் பாதையில் கச்சா எண்ணை கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது

மன்னார்குடி, மே 24: கோட்டூரில் விவசாய நிலத்தில் கச்சா எண்ணை வெளியேறி 2 ஏக்கர் சேதம் ஏற்பட்டதால் அதற்கு நிரந்தர தீர்வு காணும் வரை ஓஎன்ஜிசி குழாய் பாதையில் கச்சா எண்ணை கொண்டு செல்வதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் கோட்டூரில் அளித்த பேட்டி: திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு வயல்வெளிகளில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படுகிற பாதைகளில் விளைநிலங்களுக்கு கீழே புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் தமிழக அரசின் வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றாமல் பூமி மட்டத்திலிருந்து 3 அடி, 4 அடி ஆழத்தில் மட்டுமே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இதனால், உழவு பணிகளை மேற்கொள்ள இருக்கும்போது குழாயில் அழுத்தம் ஏற்பட்டு வெடிப்பு ஏற்படுகிறது. கோடையில் வெப்ப தாக்கத்தால் குழாய்களில் உடைத்துக்கொண்டு கச்சா வெளியேறி விளைநிலங்களை பாழ டிக்கிறது.

இதனை முன்கூட்டியே கண்காணிப்பதற்கு கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான பொறியியல் வல்லுநர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறதா? கண்காணிப்பில் இருந்தால் பேராபத்து தொடர்ந்து கொண்டே இருப்பது ஏன்? இதிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாப்பதற்காக தமிழக அரசு மண்ணியல் வல்லுநர் இஸ்மாயில் தலைமையில் உயர்மட்டக்குழுவை அமைத்து அக்குழு ஆய்வு செய்ததாகவும், ஆய்வின் இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இஸ்மாயில் குழு அறிக்கையின் அடிப்படையில் குறைபாடுகளை களைந்து அதற்கு நிரந்தர தீர்வுகாணும் வரை யிலும் ஓஎன்ஜிசி குழாய் பாதையில் கச்சா கொண்டு செல்வதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். இஸ்மாயில் குழு ஆய்வு குறித்து அறிக்கையை வெளியிட்டு பொதுமக்கள், விவசாயிகள் உண்மைநிலையை தெரிந்துக் கொள்ளும் வெளிப்படையான விவாதத்திற்கு தமிழக அரசு உட்படுத்தவேண்டும். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related Stories: