கொள்ளிடம் அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா

மயிலாடுதுறை, ஏப்.21: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புத்தூரில் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கல்லூரியில் 6 இளநிலைப் பாடப்பிரிவுகளும், 2 முதுகலைப் பாடப்பிரிவுகளும் உள்ளன. இங்கு 1,078 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை ஏற்று விழாவை தொடங்கி வைத்தார். தமிழ்த்துறைத் தலைவர் சசிகுமார் வரவேற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் கலந்துகொண்டு 180 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், மாணவ, மாணவிகள் தங்கள் வாழ்வில் இன்னும் பல உயரிய பட்டங்களை பெற வேண்டும். எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின் என்ற திருவள்ளுவர் குறளுக்கு ஏற்ப வாழ்க்கையில் பல உச்ச நிலைகளை அடைய வேண்டும். தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்றார். கல்லூரி பேரவை பொறுப்பாசிரியர் நாராயணசாமி, துறை தலைவர்கள் குமார், சாந்தி, பிரியா, உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன், சுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: