சூலூர், ஏப்.12: சூலூர் அருகே விற்பனைக்காக 3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். தமிழக போலீசார் கஞ்சா வேட்டை ஆப்ரேஷன் 2.0 என்ற பெயரில் தொடர் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சூலூரில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான தனிப்படை போலீசார் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தொடர் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று தென்னம்பாளையம் நான்கு ரோடு அருகே துணை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் வடமாநில வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அவரைப் பிடித்து விசாரித்தபோது கஞ்சா பொட்டலங்களை தனது பேன்ட் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை சூலூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.