அரியலூர், மார்ச் 26: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரியலூர் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின்கீழ் பல்வேறு செயலாக்க துறைகள் மூலம் திட்டங்களின் செயல்பாட்டை மாவட்ட அளவில் அலுவலர்களை கொண்டு கண்காணிக்க குழு நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.இந்த கண்காணிப்பு குழுவினர் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்து, மாவட்ட கலெக்டர் தலைமையில் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இக்குழுவினர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாவட்ட பஞ்சாயத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தாட்கோ, ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், மக்கள் நல்வாழ்வுத் துறை, மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைகள், செலவு செய்யப்பட்ட விபரம், பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையாக அளிக்க உள்ளார்கள்.