அரவக்குறிச்சி, மார்ச் 26: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையால், நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நங்காஞ்சியாறு, குடகனாறு, அமராவதி ஆறு மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஓடை, வாரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அரவக்குறிச்சி வட்டம், நாகம்பள்ளி கிராமம், அமராவதி ஆற்று புறம்போக்கு, வெஞ்சமாங்கூடலூர் மேல்பாகம் கிராமம், குடகனாறு புறம்போக்கு மற்றும் வேலம்பாடி கிராமம், நங்காஞ்சியாறு புறம்போக்கு நிலங்களில் வேலி அடைத்தும், வாய்க்கால் வெட்டியும், குப்பைக் குழிகள் அமைத்தும், உழவடை செய்தும் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் அரவக்குறிச்சி வட்டாட்சியர் ராஜசேகரன், அமராவதி வடிநில உபகோட்ட உதவி பொறியாளர், சீனிவாசன், அரவக்குறிச்சி மண்டல துணை வட்டாட்சியர் குமரேசன், அரவக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் சுரேஷ், நாகம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சாமியாத்தாள் ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டது.