தர்மபுரி: பாலக்கோடு அருகே, துக்க வீட்டிற்கு சென்று திரும்பும் வழியில், சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே ஜக்கசமுத்திரம் ஒட்டுப்பட்டியைச் சேர்ந்த 15 பெண்கள் உள்பட 2 பேர், சரக்கு வேனில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாளம் புதூர் பகுதிக்கு நேற்று சென்றனர். அங்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மாரண்டஅள்ளியை தாண்டி சாஸ்திரமுட்லு என்னுமிடத்தில், மதியம் 2 மணியளவில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலை இறக்கமாக இருந்ததால் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய வேன், அங்குள்ள பள்ளத்திற்குள் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.