கோவை மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளுக்கு 9 இடத்தில் வாக்கு எண்ணிக்கை மையம்

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கோவை மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளுக்கு 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்குச்சாவடி அமைப்பு, வேட்பாளர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சிக்கு அரசு தொழில்நுட்பக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை, காரமடை, கூடலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை ஆகிய நகராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அந்தந்த நகராட்சிகளிலேயே அமைக்கப்படவுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கோவையில் உள்ள 33 பேரூராட்சிகளுக்கு 9 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 604 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 81 ஆயிரத்து 36 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 50 பேர் என மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரத்து 690 வாக்காளர்கள் உள்ளனர். 33 பேரூராட்சிகளில் தலா 135 ஆண், பெண் வாக்குச்சாவடிகள், 455 பொது வாக்குச்சாவடிகள் என மொத்தம் 725 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

இந்நிலையில் 33 பேரூராட்சிகளுக்கும் அன்னூர், கோட்டூர், ஆனைமலை, சூலூர், ஒத்தகால் மண்டபம், ஆலாந்துறை, வடவள்ளி, சரவணம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய 9 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த 9 மையங்களில் அருகில் உள்ள பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும்’’ என்றனர்.

கோவை மாவட்டத்தில் 37 பேரூராட்சிகள் இருந்தன. இதில் காரமடை, கூடலூர், மதுக்கரை, கருமத்தம்பட்டி ஆகிய பேரூராட்சிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 33 ஆக குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் மொத்தம் 725 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இதில் 67 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின்போது இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories: