ஸ்பிக்நகர், ஜன. 26: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திமரப்பட்டியில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த சில வருடங்களாக செயல்படாமல் இருந்தது. முறையான பராமரிப்பில்லாமல் மருத்துவமனையின் கட்டிடம் சேதமடைந்தது. இதனை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய மருத்துவமனை கட்ட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து சுகாதார நல நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தில் புதிய சுகாதார நிலையம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தினர். நேற்று ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர், பழுதடைந்த நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் மகளிர் சுயஉதவி குழு கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நிகழ்ச்சியில் திமுக தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, பகுதி செயலாளர் பொன்னரசு, அன்னை இந்திரா நகர் பகுதி செயலாளர் சிவகுமார், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சுயம்பு, வட்ட செயலாளர்கள் பச்சிராஜா, கிருபானந்தன், சுப்பிரமணியன், இளைஞரணி புவனேஷ்நாதன், ராஜ், ராஜதுரை, செல்வக்குமார், கோரம்பள்ளம் நாகராஜ், உப்பாத்து ஓடை ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, விவசாய சங்க தலைவர் திருமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.