திண்டுக்கல், ஜன.19: பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செல்பி எடுத்து நூதன போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தனியார் செல்போன் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க கோரியும் நேற்று திண்டுக்கல் சோனா டவர் அருகே உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மைய அலுவலகத்தின் முன்பு செல்பி எடுத்து நூதன போராட்டம் நடந்தது. இந்த நூதன போராட்டத்திற்கு நகரச் செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பாலாஜி, நகர துணைத் தலைவர்கள் ஜெகன், ஜூலியன் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் மத்திய அரசு தனியார் செல்போன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றது. மேலும் தனியார் செல்போன் நிறுவனங்கள் கட்டணக் கொள்ளை நடத்தி வருகின்றன. இதனை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. 4ஜி மற்றும் 5ஜியை பிஎஸ்என்எல் மூலமாக உடனடியாக அறிமுகம் செய்து பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் கைகளில் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.