திங்கள்சந்தை, ஜன. 19 :திங்கள்நகர் பஸ் நிலையத்தில் பச்சிளம் குழந்தையை கொல்ல முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திங்கள்நகர் பேருந்து நிலைய பிளாட்பார்மில் ஆதரவற்றவர்கள் தங்கி வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பச்சிளம் குழந்தை ஒன்றை யாசகம் பெறும் ஒரு ஆணும், பெண்ணும் அதட்டி கொண்டே இருந்தனர். இதை அங்கு நின்ற இளைஞர்கள் சிலர் கவனித்து கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் அந்த ஆண் போதையில் குழந்தையை தரையில் அடிக்க முயன்றார். இதை கவனித்த இளைஞர்களில் ஒருவர் ஓடிப்போய் குழந்தையை பறித்து காப்பாற்றினார். இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற பொதுமக்கள், அந்த குழந்தை குறித்து கேட்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அங்கு தங்கியிருந்த ஆதரவற்ற மற்ற சிலரிடம் கேட்டபோது, இவர்களிடம் குழந்தை இல்லை. இவர்கள் இருவர் மட்டும் தான் இங்கு தங்கியிருந்தனர். இன்றுதான் குழந்தையுடன் வந்துள்ளனர் என கூறினர்.