திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி

கும்பகோணம், ஜன.19: கும்பகோணம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர்  மகாலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர்  மகாலிங்க சுவாமி கோயில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானது. இந்த கோயிலில் தைப்பூச பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் தைப்பூசத் பெருவிழாவை முன்னிட்டு கடந்த 9ம் தேதி மகாலிங்க சுவாமி கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 9ம் திருநாளை முன்னிட்டு தேரோட்டம் அதிகாலை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 10ம் நாள் திருவிழாவாக நேற்று தைப்பூச தீர்த்தவாரி பெருவிழாவில் காலை 11 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் காவிரி ஆற்றில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் தைப்பூசத் தீர்த்தவாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இரவு வெள்ளிரதக் காட்சியும் நடைபெற்றது. தைப்பூசவிழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான  மகாலிங்க சுவாமி கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: