திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வர்த்தக நிறுவனங்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்

திருவாரூர், ஜன.19: திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு,திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கடைகள், நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் தொழிலாளர் நல சட்டங்களின் கீழ் தங்களது நிறுவனத்தை www.labour.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்து கொள்ளுமாறு அதன் உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அதற்கான கட்டணங்களையும் இணையதளம் மூலமே செலுத்த வேண்டும்.மேலும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகைகள் மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் 1958-ன் கீழ் தாக்கல் செய்யப்பட வேண்டிய தகவல்கள், படிவம் வி, தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்டம் 1947-ன் கீழ் படிவம் ஓ, படிவம் எஸ் மற்றும் உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த ஆண்டறிக்கையினையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளம் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

தொழில், உணவு, வணிகம், கடைகள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வார்கள், அப்போது முரண்பாடு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: