13ம்தேதி போகி பண்டிகை கொண்டாட்டம் குமரியில் பொங்கல் பொருட்கள் விற்பனைக்கு குவிந்தன ஒரு கட்டு கரும்பு ₹550

நாகர்கோவில், ஜன.11: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14ம்தேதி கொண்டாடப்படுகிறது. வரும் 13ம்தேதி போகி பண்டிகை ஆகும். இந்த ஆண்டு போகி பண்டிகை அன்று வைகுண்ட ஏகாதசியும் வருகிறது.  குமரி மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டும். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக  விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொங்கலையொட்டி வீடுகளில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளும் நடந்த வண்ணம் உள்ளன.பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படும்.  பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் போகி ஆகும். எனவே வீடுகளில் தேவையில்லாத பொருட்களை தீ வைத்து கொளுத்துவார்கள். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் போகி கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. குமரி மாவட்டத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. வடசேரி, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், மார்த்தாண்டம், திங்கள்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விற்பனைக்காக ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்துள்ளனர்.  ராஜபாளையம், நிலக்கோட்டை, திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து மஞ்சள் குலைகள் மற்றும் பனங்கிழங்கு வியாபாரிகள் வந்துள்ளனர். கரும்பு, பனங்கிழங்கு, காய்கறிகளின் விலைகள் கடந்த ஆண்டை விட  கடுமையாக உயர்ந்துள்ளன. கரும்பு ஒரு கட்டு ரூ.550 என வடசேரி பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் கிழங்கு பல்வேறு வகைகளில் தரத்துக்கேற்ப விற்பனையாகிறது. இதே போல் பொங்கல் பானைகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. பித்தளை, வெண்கல பானைகள் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்காக உள்ளன. புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் கொடுப்பதற்கான பொருட்களையும் மக்கள் வாங்கி செல்கிறார்கள். ஆனால் கடந்த ஆண்டை விட விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.  பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் (15ம்தேதி) மாட்டு பொங்கல் ஆகும். அதற்கு மறுநாள் காணும் பொங்கல் ஆகும். தொடர்ந்து விடுமுறை வரும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என தெரிகிறது.

Related Stories: