தோகைமலை, ஜன. 5: கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து அபராதம் விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தோகைமலை, கழுகூர், நாகனூர், காவல்காரன்பட்டி, நெய்தலூர், பேரூர், கீழவெளியூர் மற்றும் கொசூர் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேக்கரி கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான தின்பண்டங்கள் அதிகமான அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான தின்பண்டங்களுக்கு தயாரிப்பு தேதி மற்றும் அப்பொருட்கள் பயன்படுத்தும் காலாவதி ஆகும் தேதிகள் குறிப்பிடாமல் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு கூட்டத்தில் தோகைமலை பகுதியில் இருந்து பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் பொதுமக்கள் பயன்படுத்தும் தின்பண்டங்களுக்கு தயாரிப்பு தேதி மற்றும் அப்பொருட்கள் பயன்படுத்தும் காலாவதி தேதிகள் குறிப்பிடாமல் விற்பனை செய்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.