திருச்சி, ஜன.3: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் ஒரு லட்சத்து 8 வடைமாலை சாற்றப்பட்டது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில், தலைமை தபால் நிலையம் ஆஞ்சநேயர் கோயில், ரங்கம் ஆஞ்சநேயர் கோயில் என திருச்சியில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நேற்று நடைபெற்றது. கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை மற்றும் 10,008 ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டது. முன்னதாக மூலவர், உற்சவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு வழிபாடு முடிந்த பின் சிறப்பு அலங்காரத்தில் மூலவர், உற்சவர் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். இதை முன்னிட்டு கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதேபோல தலைமை தபால் நிலையம் ஆஞ்சநேயர் கோயிலில் 10,008 வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சியளித்தார். கோயிலில் கூட்டம் கூடுவதை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர்கள் கூறுகையில், ‘காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஒரு லட்சத்து எட்டு வடை மாலை, 10,008 ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டது. இந்த ஆஞ்சநேயர் கோயிலை தவிர எந்த கோயிலிலும் பாரிஜாதா பூ கிடையாது. சஞ்சீவி மலைதான் வைத்திருப்பார். இக்கோயிலில் ஆஞ்சநேயர் வலது கையில் அபயஹஸ்தமும், இடது கையில் பாரிஜாத பூவும் வைத்துள்ளார். இக்கோயில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்று தொட்டு விளங்குகிறது’ என்றனர்.
