வேலூர், ஜன.3: வேலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன. மார்கழி மாதம் மூல நட்சத்திரம் மற்றும் அமாவாசை திதியன்று வரும் அனுமன் ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. வேலூர் மாவட்டத்தில் வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து நேற்று இரவு 7 மணியளவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. அதேபோல் தோட்டப்பாளையம் மந்தைவெளி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், நாள் முழுவதும் அன்னதானமும் நடந்தது. மேலும் வேலூர் மெயின் பஜார், குட்டைமேடு வீரஆஞ்சநேயர், புதுவசூர் சஹஸ்ரலிங்க யோக ஆஞ்சநேயர் கோயில்களில் காலை சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன.