ஆண்டிபட்டி, டிச. 8: கொரோனா முற்றிலுமாக குறையாத நிலையில், ஒமிக்ரான் வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், ஆண்டிபட்டி பகுதியில் பொதுமக்கள் விழிப்புணர்வில்லாமல், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சுற்றுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, பலர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. திமுக ஆட்சி அமைந்து முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், தீவிர நடவடிக்கை எடுத்து 2ம் அலையை கட்டுப்படுத்தினார். ஊரடங்கும் படிப்படியாக தளர்த்தப்பட்டு, பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், வெளி நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி புதிய வகை ஒமிக்ரான் வைரஸாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.