மன்னார்குடி, டிச. 11: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பழமொழி அதற்கேற்ப விவசாயிகளின் வாழ்விலும் ஒரு வழி பிறக்கும் நாளாக இன்றளவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப் பட்டு வருகிறது. பொங்கல் திருநாளில், முக்கிய இடம் பிடிப்பது கரும்புகள். பொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொருவரின் வீடுகளிலும் தவறாமல் இடம் பெறுவது கரும்பு தான்.தமிழர் திருநாளாம் பொங்கல் என்றாலே தித்திக்கும் செங்கரும்புகளின் சுவையை நினைத்து பார்க்காதவர்கள் இருக்க முடியாது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கரும்பு பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.அதன்படி, பொங்கல் வைக்கும் போது கரும்பு, மஞ்சள், இஞ்சி, மாவிலை, பழம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செங்கரும்பு எனும் கருப்பு கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.அதன்படி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மகாதேவபட் டினம், நெடுவாக்கோட்டை, நாகை, காரிக்கோட்டை, செருமங்கலம், காஞ்சிக்குடிக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 400 ஏக்கருக்கு மேல் இந்தாண்டு கரும்பு சாகுபடி செய்யப் பட்டுள்ளது.கரும்பு விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விதை கரும்பு நட்டு தொடர்ந்து உரம், தண்ணீர் விட்டு பராமரித்து வந்தனர். விளைந்த நிலையில் சில இடங்களில் வயலிலேயே கரும்புகளை வைத்து சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்வார்கள்.