தேனி, டிச. 8: தேனி கலெக்டர் அலுவலகத்தில், முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கறி விதைத்தளைகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் முரளிதரன் தலைமை வகித்தார். பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் முன்னிலை வகித்தார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பாண்டி வரவேற்றார். கலெக்டர் முரளிதரன், எம்எல்ஏ சரவணக்குமார் ஆகியோர் விவசாயிகள், பொதுமக்களுக்கு மானிய விலையில் காய்கறி விதைத்தளைகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினர்.
கலெக்டர் பேசுகையில், ‘இத்திட்டத்தின் கீழ், தக்காளி, கத்தரி, வெண்டை ஆகிய 12 வகையான காய்கறி விதைத்தளைகள் ரூ.225, செடி வளர்ப்பு பைகள், கோகோ பித் கட்டிகள் மற்றும் உயிர் உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் 6 வகையான காய்கறி விதைகள் கொண்ட மாடிதோட்ட தளைகள் ரூ.15, முருங்கை, கருவேப்பிலை, எலுமிச்சை, திப்பிலி, கற்பூரவள்ளி, கற்றாழை, பிரண்டை, பப்பாளி உள்ளிட்ட 8 வகையான பழ, காய்கறி, மூலிகைப் பயிர்கள் கொண்ட செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகள் ரூ.25 என மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகளும், பொதுமக்களும் வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.