குளித்தலை, டிச. 8: கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இவ்வழியாக மதுரை, திண்டுக்கல், தரகம்பட்டி, பாளையம், தோகைமலை மணப்பாறை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களும், அதேபோல் சேலம், நாமக்கல், முசிறி, துறையூர், பெரம்பலூர், கரூர், பெட்டவாய்த்தலை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களும் தினம் தோறும் ஆயிரக்கணக்கில் இந்த மணப்பாறை ரயில்வே கேட்டைக் கடந்து தான் செல்ல வேண்டும். மேலும் சுற்றுவட்டாரத்தில் இருந்து பணிக்குச் செல்லும் அலுவலர்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் இவ்வழியாக தான் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்து வருகிறது
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவ்வழியாக சேலத்தில் இருந்து மணப்பாறை நோக்கி மிஷினரி ஏற்றிசென்ற வாகனம் மோதியதில் ரயில்வே கேட் சேதமடைந்து தடுப்பு கம்பி மின் வயரில் உரசியதால் திடீரென தீப்பொறி ஏற்பட்டது. இதனைக்கண்ட கேட் கீப்பர் உடனடியாக விரட்டிச் சென்று லாரி ஓட்டுனர் ரஞ்சித்தை மடக்கிப் பிடித்தார். அதன்பிறகு ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.