அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில் ஊட்டச்சத்து சிறு தானியங்கள்: விற்பனை செய்ய கோரிக்கை

அரவக்குறிச்சி, மே 8: அரவக்குறிச்சி வட்டாரப்பகுதி ரேசன் கடைகளில் ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்கள் கம்பு, சோளம், கோழ்வரகு, சாமை வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரேசன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. தற்பொழுது கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை,வரகு, தினை, குதிரைவாலி உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்கள் பற்றிய விழிப்பணர்வு அதிகரித்துள்ளது. சிறுதானியங்களை சர்க்கரை நோயளிகள் முதியவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் இவற்றிலுள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்களின் காரணமாக சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் சிறுதானியங்களை ஆர்வமுடன் வாங்குகின்றனர். இதனால் சிறுதானியங்களுக்கான பிரத்தியேகமான விற்பனை நிலையங்கள் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் துவக்கப்பட்டு வருகின்றது. இங்கு விலை அதிகமாக உள்ளது. இதனால் வசதிபடைத்தவர்கள் மட்டுமே சிறுதானியங்களை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சிறுதானியங்களை பயன்படுத்த நினைத்தாலும் விலை அதிகமாக உள்ளதால் நடுத்தர மக்கள் குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழும் என்பதால் அரிசியை விட சத்தான சிறுதானியங்களை நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இதனை வாங்கி பயன்படுத்தி தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதனால் அனைவரும் சிறுதானியங்களை வாங்கி பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு ரேசன் கடைகளில் கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, திணை, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு கிடைப்பதுடன் ஏழை எளிய சர்க்கரை நோயாளிகளுக்கும் இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். சிறுதானியங்கள் பயன்பாடு அதிகரிப்பதால் இதனை பயிரிடும் விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கும் வாழ்வாதாரம் மேம்படும். ஆகையால் அரவக்குறிச்சி வட்டாரப் பகுதி ரேசன் கடைகளில் ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்கள் கம்பு, சோளம், கோழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில் ஊட்டச்சத்து சிறு தானியங்கள்: விற்பனை செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: