நாகை, டிச.7: தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீன்வளர்ப்பை விரும்பும் நாகை மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பை ஊக்குவிக்கவும், மீன் உற்பத்தியினை பெருக்கிடவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி நாகை மாவட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரித்திடவும், மீன் வளர்ப்போரை ஊக்குவிக்கவும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2021 -22 கீழ் தமிழகத்தில் விரால் மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க இடுபொருள் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. விரால் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகளால் இத்திட்டத்தில் ஏற்கனவே 1000 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டைகளை புனரமைப்பு செய்யவும் மற்றும் விரால் மீன் வளர்ப்பு செய்ய ஆகும் உள்ளீட்டு செலவினம் ஆக மொத்தம் ரூ.75 ஆயிரத்தில் 40 சதவீதம் பின்னிலை மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மீன்குஞ்சு வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகள் ஒரு எக்டேரில் ரூ.6 லட்சம் செலவு செய்து மீன்குஞ்சு வளர்ப்புகுளம் அமைத்திட 50 சதவீதம் பின்னிலை மானியமாக ரூ.3 லட்சம் மற்றும் ஒரு எக்டேருக்கு நீர் பரப்பில் மீன்குஞ்சு வளர்ப்பு செய்ய ஆகும் உள்ளீட்டு செலவினத்திற்கான தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் 40 சதவீதம் பின்னிலை மானியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் மீன்வளர்ப்பு குளம் அமைத்திட ஒரு எக்டேரில் ரூ.7 லட்சம் செலவு செய்து 50 சதவீதம் பின்னிலை மானியமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ஒரு எக்டேர் நீர் பரப்பில் மீன் வளர்ப்பு செய்ய ஆகும் உள்ளீட்டு செலவினத்திற்கான தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் 40 சதவீதம் பின்னிலை மானியமாக ரூ.60 ஆயிரம்- வழங்கப்படுகிறது. மேற்படி திட்டங்களில் மானிய தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். மற்றும் பெறப்படும் விண்ணப்பங்களில் மூப்புநிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும். எனவே மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், நாகை (தெற்கு) அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.